PUBLISHED ON : ஜூலை 13, 2024 12:00 AM

திருப்பூர் கட்டட பொறியாளர் சங்கம் சார்பில், கட்டுமானப் பொருள் கண்காட்சி, திருப்பூர் காயத்ரி மஹாலில் நடந்தது. இதன் துவக்க விழா, காலை 9:30 மணிக்கு நடப்பதாக இருந்தது. இதில், தமிழக செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்பர் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அமைச்சர், 10:30 மணிக்கு வந்தார். கண்காட்சி அரங்கை திறந்து வைத்து பேசுகையில், 'இன்று அமாவாசை. குல தெய்வம் கோவிலில் வழிபாடு செய்து விட்டு, மற்றொரு கோவிலில் திருப்பணி நடப்பதை பார்வையிட்டு விட்டு வந்ததால் தாமதமாகி விட்டது' என்றார். அதே போல, எம்.எல்.ஏ. செல்வராஜ், அவரது தாய் நினைவுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்துவதால் நிகழ்ச்சிக்கு வரவில்லை என, தெரிவிக்கப்பட்டது.
இதைக்கேட்ட பார்வையாளர் ஒருவர், 'இவங்க கட்சி தலைமை என்ன தான் பகுத்தறிவு பேசினாலும், கட்சி நிர்வாகிகள் பக்தியுடனும், ஆன்மிக உணர்வுடனும் தான் உள்ளனர். யாராலும் சனாதனத்தை அழிக்க முடியாது' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.