PUBLISHED ON : ஆக 02, 2024 12:00 AM

சேலம் மாவட்ட வேளாண்மை துறை சார்பில், வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நெய்காரப்பட்டியில் நடந்தது. இதில், மாவட்டம் முழுதும் இருந்து, 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். கருத்தரங்கை கலெக்டர் பிருந்தா தேவி, சேலம் தி.மு.க., -- எம்.பி., செல்வகணபதி, வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்து ஆகியோர் துவக்கி வைப்பதாக, அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால், மூன்று பேருமே நிகழ்ச்சிக்கு வரவில்லை. மாறாக அழைப்பிதழில் பெயர் கூட இல்லாத வீரபாண்டி, 'அட்மா' குழு தலைவர் வெண்ணிலா கருத்தரங்கை துவக்கி வைத்தார்.
மூத்த விவசாயி ஒருவர், 'வாரம் ஒருநாள் குறைதீர் கூட்டத்தில் நம்மள பார்க்கிறதே கலெக்டருக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்... இதுல இந்த நிகழ்ச்சிக்கும் போகணுமான்னு நினைச்சிருப்பாங்க...' என, முணுமுணுக்க, மற்றொரு விவசாயி, 'விவசாயிகள் மீதான இவங்க அக்கறை இவ்ளோ தான்...' என, 'கமென்ட்' அடித்தவாறு நடந்தார்.