PUBLISHED ON : மே 22, 2024 12:00 AM

திருப்பூரில் நடந்த மாவட்ட காங்., நிர்வாகிகள்கூட்டத்தில், வடக்கு மாவட்ட தலைவர் கோபிநாத் பேசுகையில், 'ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை திருப்பூர் வந்துள்ளது என்றால் நம்புவீர்களா...? அந்த யாத்திரைக்கு சிறப்பான ஏற்பாடு செய்தவர், இளைஞரணி மாநில தலைவர் விச்சு லெனின் பிரசாத். அவர் திருப்பூர் வந்திருப்பது நமக்கு பெருமை' என்றார்.
அதை கேட்டு, ஒரே ஒரு பெண் தொண்டர் மட்டும் கை தட்ட, 'என்னங்க... மாநில தலைவர்னு சொல்றேன். அக்கா மட்டும் கை தட்டுறாங்க...' என்றதும், தொடர்ந்து ஓரிருவர் கரவொலி எழுப்பினர், இதையடுத்து, 'முதலில் கூச்சத்தை விடுங்கள். வெட்கத்தை விட்டு தாராளமாக கை தட்டுங்கள். அப்போது தான் நாம் வளர முடியும்; அரசியலில் ஜெயிக்க முடியும்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'ஆமாங்க... ஸ்டாலின், காமராஜர் ஆட்சி நடத்துறார்னு கூச்சமே இல்லாம இளங்கோவன் சொல்லலியா... அதைத்தான் இவரும் சொல்றார்...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.

