PUBLISHED ON : ஜூலை 01, 2024 12:00 AM

கள்ளச்சாராயம் விவகாரத்தில், தி.மு.க., அரசை கண்டித்து, மதுரையில், அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், அக்கட்சியின் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா பேசுகையில், 'கள்ளச்சாராயத்தால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த படங்கள், 100 நாள் ஓடினால் அதை கொண்டாடுவோம். கிரிக்கெட்டில் தோனி, 100 ரன்கள் அடித்தால், 'செஞ்சுரி' அடித்ததாக கொண்டாடுவோம். ஆனால், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் மரண ஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. பலி எண்ணிக்கை, 60ஐ தாண்டி விட்டது. ஸ்டாலின், 'ஆப் செஞ்சுரி' அடித்துவிட்டார்' என்றார், கிண்டலாக.
பார்வையாளர் ஒருவர், 'கள்ளச் சாராயம் குடிச்சி, கூலி தொழிலாளர்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... சினிமாவிலும், கிரிக்கெட்டிலும் செஞ்சுரியை கொண்டாடுற மாதிரி, அரசியல் செய்யுறதுக்காகவே, சாராய பலியும் செஞ்சுரி அடிக்கணும்னு இவங்க எதிர்பார்க்குறாங்களா...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.