PUBLISHED ON : செப் 18, 2024 12:00 AM

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், ஏனாத்துார்- செட்டியார் பேட்டையில் நடந்த வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், மாவட்ட செயலர் சுந்தர் பங்கேற்றார்.
அவருக்கு, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ஜெயபால், 50 ரூபாய் நோட்டு மாலை அணிவித்தார். மேலும், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், எம்.எல்.ஏ., எழிலரசன் ஆகியோருக்கு, 20 ரூபாய் நோட்டு மாலையும், வாலாஜாபாத் ஒன்றிய சேர்மன்தேவேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ராஜலட்சுமி ஆகியோருக்கு, 10 ரூபாய் மாலையையும் அவர் அணிவித்தார்.
இதை பார்த்த கட்சி நிர்வாகி ஒருவர், 'ஆளுங்கட்சியா இருந்தாலும், பைசா தேத்த முடியலன்னு நம்ம கட்சி கவுன்சிலர்கள் புலம்புறாங்க... இவர் ரூபாய் நோட்டுல மாலையே போடுறாரே...' என முணுமுணுக்க, மற்றொரு நிர்வாகி, 'அப்ப ஏதாச்சும் வெயிட்டா கிடைச்சிருக்கும்...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தவாறு நடந்தார்.

