PUBLISHED ON : மே 09, 2024 12:00 AM

விருதுநகரில் நடந்த உழைப்பாளர் தின விழாவில், தமிழக வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜன் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றனர்.
அப்போது, 'அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் இன்று வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. வெயில் காலம் என்பதால் குளிர் பிரதேசத்திற்கு ஓய்வு எடுக்க சென்றிருப்பார் என நினைத்தேன்' என, ராஜேந்திர பாலாஜி கலாய்த்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், 'அமைச்சர் கடும் உழைப்பாளி. அவரது உழைப்பு மாவட்டத்திற்கு அவசியம். ஆட்சியில் யார் இருந்தால் என்ன; நம் மாவட்டம் சிறந்த மாவட்டம் என பெயரெடுக்க வேண்டும்' என்றார்.
அ.தி.மு.க., தொண்டர் ஒருவர், 'அவர் கடுமையா உழைத்ததால் தான் அமைச்சரா இருக்கார்... அசட்டையா இருந்ததால தான், நாம ஆட்சியை பறிகொடுத்துட்டு டம்மியா இருக்கோம்...' என, புலம்பியபடி நடந்தார்.