PUBLISHED ON : ஏப் 01, 2024 12:00 AM

ஸ்ரீபெரும்புதுார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் அறிமுக கூட்டம், சென்னை, பல்லாவரத்தில் நடந்தது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ., பெருங்குடி கந்தன் பேசுகையில், வேட்பாளர் பிரேம்குமார் பெயரை பிரவீன்குமார் என்று கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், 'ஆலந்துார் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் பெறும் ஓட்டுகளை விட கூடுதலாக, 30,000 ஓட்டுகள் பெற்று தருவேன்' என்றார். அவரை தொடர்ந்து பேசிய முன்னாள் எம்.எல்.ஏ., வாலாஜாபாத் கணேசனும், பிரேம்குமாரை, பிரவீன்குமார் என்றே அழைத்தார்.
இதைக் கேட்ட நிர்வாகிகள் சிலர், 'இவங்களுக்கே வேட்பாளர் பெயர் தெரியலையே... இதுல இவ்வளவு பெரிய தொகுதியில், வாக்காளர்களிடம் எப்படி வேட்பாளர் பெயரை கொண்டு சேர்ப்பர்... இந்த லட்சணத்துல, கூடுதல் ஓட்டு வாங்கி தருவேன்னு வேற அடிச்சு விடுறாங்களே...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினர்.

