PUBLISHED ON : பிப் 24, 2025 12:00 AM

தி.மு.க., ஆட்சி குறித்து, அ.தி.மு.க.,வின், ஜெ., பேரவை சார்பில், தமிழகம் முழுவதும் திண்ணை பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
மதுரை, முனிச்சாலையில் முதல் திண்ணை பிரசாரத்தை, பேரவையின் மாநில செயலரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு துவக்கி வைத்தனர். அப்பகுதி பூக்கடைகள், டீ கடைகள், ஹோட்டல்களில், 'நோட்டீஸ்' கொடுத்தபடியே வந்தவர்கள், பரோட்டா கடையை பார்த்ததும் நின்றனர்.
'சுடச்சுட வாங்கித் தரப் போகின்றனரோ' என, கூடவே வந்தவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்க, உதயகுமார் திடீரென மாஸ்டராகி, பரோட்டா சுட ஆரம்பித்து விட்டார். பரோட்டாவை திருப்பி போட்டவர், 'இப்படி தாங்க, தி.மு.க., ஆட்சியையும் திருப்பிப் போட்டு, அ.தி.மு.க., ஆட்சியை கொண்டு வரணும்' என்றார். இதை அருகில் இருந்த செல்லுார் ராஜுவும் ஆமோதித்தார்.
மூத்த நிருபர் ஒருவர், 'மீண்டும், அ.தி.மு.க., ஆட்சிக்கு வர மாஸ்டர் பிளான் போடுவாங்கன்னு பார்த்தா, இப்படி பரோட்டா மாஸ்டர் ஆகிட்டாங்களே...' என, 'கமென்ட்' அடிக்க, அந்த ஏரியாவே கலகலப்பானது.