PUBLISHED ON : ஜூலை 30, 2025 12:00 AM

முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
பள்ளி மாணவ - மாணவியருக்கு கல்வி உபகரணங்கள், புத்தக பைகளை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு வழங்கினார். இதில், மாநில நிர்வாகிகள் பலரும் மேடையில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். தமிழக காங்கிரஸ் மகளிர் அணி தலைவி சையத் அசினாவுக்கு கடைசி வரிசையில் சீட் ஒதுக்கியிருந்தனர்.
கல்வி உபகரணங்கள் வழங்கும்போது முதல் வரிசைக்கு சையத் அசினா வந்து நிற்க, மாநில நிர்வாகிகள் சிலர், அவரை தள்ளி நிற்கும்படி கூறினர்.
'டென்ஷன்' ஆன அவர், 'பெண்களுக்கு, 33 சதவீதம் இடஒதுக்கீடு தரணும்னு பேசுறீங்களே தவிர, ஒரு லேடிக்கு உட்கார நாற்காலி கூட தராம அவமானப்படுத்துறீங்களே' என்று சத்தம் போட, பதிலுக்கு மாநில நிர்வாகிகள் முணுமுணுக்க, தங்கபாலு தலையிட்டு சமாதானப்படுத்தினார். இதை பார்த்த மூத்த நிருபர் ஒருவர், 'காங்கிரசையும், கலாட்டாவையும் பிரிக்கவே முடியாதுப்பா...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தனர்.

