PUBLISHED ON : செப் 30, 2025 12:00 AM

சென்னை ராயபுரம், எம்.எஸ்.நகரில், ஸ்ரீ அலங்கார முத்துமாரியம்மன் கோவிலில், 52வது ஆண்டு திருவிழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கலந்து கொண்டார்.
திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு படைப்பதற்கு சிக்கன், முட்டை உள்ளிட்டவற்றை அங்கிருந்த பெண்கள் சமைத்து கொண்டிருந்தனர். இதை பார்த்து குஷியான ஜெயகுமார், பெண்களுக்கு உதவும் வகையில், தானே இறங்கி சிக்கன் 65 போடுவது, அவித்த முட்டையை உரிப்பது போன்ற செயல்களை செய்தார்.
இதை பார்த்த ஒருவர், 'அண்ணன் பேட்டிகள் தருவதில் தான் கில்லின்னு பார்த்தா, சமையல்லயும் புகுந்து விளையாடுறாரே...' என்றார். அருகில் இருந்த அவரது நண்பர், 'தேர்தல் வருதுல்லா... இனி, அடிக்கடி அண்ணன் இந்த மாதிரி பரோட்டா போடுறது, டீ ஆத்துறதுன்னு இறங்கி அடிப்பாரு பா...' என கூற, அனைவரும் சிரித்தனர்.