PUBLISHED ON : மே 23, 2025 12:00 AM

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை ஏற்பாட்டில், ரத்த தான முகாம் நடந்தது. மாவட்டச் செயலர்கள் செல்லுார் ராஜு, ராஜன் செல்லப்பா மற்றும் ஐ.டி., பிரிவு மாநிலச் செயலர் ராஜ்சத்யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செல்லுார் ராஜு கூறுகையில், 'இம்முகாமில் இளைஞர்கள் ஆர்வமுடன் ரத்த தானம் செய்தனர். இதை கண்டு ஆளுங்கட்சியே மிரண்டு போய் உள்ளது. தி.மு.க., கூட்டத்திற்கு பீர் பாட்டில் வைத்து அழைப்பர்; நாங்கள், மக்கள் பயன் பெறும் வகையில், ரத்த தானம் எனக் கூறி அழைக்கிறோம். இளைஞர்கள் அதிகம் வருகின்றனர்' என்றார்.
இதில் பங்கேற்ற இளைஞர் ஒருவர், 'சந்தடி சாக்குல, தி.மு.க.,வை ஒரு வாரு வாரிட்டாரே...' என கூற, அருகில் இருந்தவர், 'தேர்தல் வருதுல்ல... சைக்கிள் கேப் கிடைச்சாலும், செல்லுார் ராஜு பிரசாரத்தை ஆரம்பிச்சிடுவாரு...' என சிரித்தபடியே கிளம்பினார்.