PUBLISHED ON : பிப் 24, 2026 12:17 AM

தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு, திருநெல்வேலியில் சமீபத்தில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற போது அரசின் கடன், 5.78 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது; தற்போது, 10.62 லட்சம் கோடியாக கடன் உயர்ந்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். வாங்கப்பட்ட கடன் முழுதும் கல்வி, மருத்துவம், மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் உதவித்தொகை, காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.
'தமிழக அரசு கடன் வாங்கி விட்டதாக குறை கூறுவோர், அந்த கடன், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தப்பட்டதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழக அரசு ஏழைகளுக்காக கடன் வாங்குகிறது; ஆனால், பிரதமர் மோடி அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக கடன் வாங்குகிறது' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'என்ன தான் ஏழைகளுக்காக கடன் வாங்கினாலும், நாளைக்கு அந்த ஏழைகளின் பிள்ளைகள் தலையில் தானே அது விடியும்...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.

