PUBLISHED ON : நவ 28, 2024 12:00 AM

சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலக் குழு கூட்டம், தி.மு.க.,வைச் சேர்ந்த மண்டலக் குழு தலைவர் தனியரசு தலைமையில் நடந்தது. இதில், வழக்கமாக 1 முதல் 14 வார்டுகள் வரையிலான கவுன்சிலர்கள் வரிசையாக பேச அனுமதிக்கப்படுவர்.
தற்போது, சுழற்சி முறையில் பேச அனுமதிக்கப்பட்டனர். இதன்படி, 5வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சொக்கலிங்கம் பேசிக் கொண்டிருந்தார். இவர் எப்போதும், கவிதை நடையில் பேசுவதை வழக்கமாகக்கொண்டவர். இம்முறையும் அதேபோல, தன் வார்டுக்குரிய கோரிக்கைகளை கவிதை நடையில் அடுக்கினார்.
அப்போது, குறுக்கிட்ட மண்டலக் குழு தலைவர் தனியரசு, 'கவுன்சிலர் சொக்கலிங்கத்தின் கவிதை நடை பேச்சு இல்லாமல், இந்த மண்டலக் குழு கூட்டம்முடியாது போலும்...' என்றார்.
இதைக் கேட்ட அதிகாரி ஒருவர், 'பல கவுன்சிலர்களுக்கு பேசவே தெரியாது... இவர், கவிதை நடையில் கோரிக்கை வைத்து, நம்ம கவனத்தை ஈர்த்து விடுகிறாரே...' என, பாராட்டியபடி நடந்தார்.
