PUBLISHED ON : ஜன 10, 2025 12:00 AM

திருச்சி மாநகராட்சியைக் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் உதயகுமார், மாநகர் மாவட்ட செயலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், உதயகுமார் பேசுகையில், 'தி.மு.க., அரசு மக்களுக்கு பொங்கல் பரிசு தரவில்லை. அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் பொங்கலுக்கு 2,500 ரூபாய் தருவோம்' என்றார்.
இதைக் கேட்ட பார்வையாளர் ஒருவர், 'அப்ப, எதிர்க்கட்சித் தலைவரா இருந்த ஸ்டாலின், பொங்கல் பரிசா 5,000 ரூபாய் தரணும்னு முழங்கினார்... இப்பதானே அவரோட சுயரூபம் தெரியுது... அந்த மாதிரி, நாளைக்கு இவங்க ஆட்சிக்கு வந்தால்தான் இவங்க சுயரூபமும் தெரியும்...' என, முணுமுணுத்தார்.
உடனே மற்றொருவர், 'இந்த ரெண்டு கட்சிகளும் மாறி மாறி சுயரூபத்தைக் காட்டினாலும், நாம திருந்தாம இவங்களுக்கு தானே ஓட்டு போடுறோம்... முதல்ல நாம மாறணும்...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.

