PUBLISHED ON : ஏப் 04, 2025 12:00 AM

சென்னை பூந்தமல்லி ஒன்றியம், காட்டுப்பாக்கம் ஊராட்சியில், சமுதாயக் கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி, தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி பங்கேற்றார்.
அப்போது, திருஷ்டி கழித்து பூசணிக்காய் உடைக்க, வடமாநில தொழிலாளர் ஒருவரிடம் கொடுக்கப்பட்டது; ஆனால், அவருக்கு திருஷ்டி கழிக்கும் சாங்கியம் குறித்து தெரியவில்லை.
இதை கவனித்த கிருஷ்ணசாமி, 'பூசணிக்காயை இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக என மூன்று முறையும், மேலும் கீழுமாக மூன்று முறையும் சுற்ற வேண்டும்' என, ஹிந்தியில் விளக்கி கூற, தொழிலாளியும் அப்படியே செய்தார்.
இதை கவனித்த பார்வையாளர் ஒருவர், 'இவங்க கட்சி தலைமை இருமொழிக் கொள்கையே போதும்னு சொல்லுது... இவர், அதை காதுல வாங்காம, ஹிந்தியை கரைச்சு குடிச்சிருக்காரே... இருமொழிக் கொள்கை எல்லாம் மக்களுக்கு தான்... இவங்களுக்கு இல்ல போலும்...' என, முணுமுணுத்தபடியே நடந்தார்.
