PUBLISHED ON : டிச 15, 2025 02:54 AM

அரியலுார் மாவட்ட, தி.மு.க., அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, சமீபத்தில் அரியலுாரில் நடந்தது. இதில், மாவட்ட தி.மு.க., செயலரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான சிவசங்கர் பங்கேற்றார்.
சிவசங்கர் பேசுகையில், 'மத்திய பாசிச பா.ஜ., ஆட்சியை எதிர்த்து நிற்கக் கூடிய தலைவராகவும், இந்தியாவுக்கே வழிகாட்டும் கொள்கை தலைவராகவும், தமிழக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை, மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்துகின்றனர்.
'இன்று தனிப்பட்ட ஒருவரது செயலால், தமிழகத்தையே பிளவுபட செய்யும் காட்சிகளை எல்லாம் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே, ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான், தமிழகத்தை காப்பாற்ற முடியும்...' என்றார்.
இதைக் கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் சம்பந்தமா தீர்ப்பு தந்த நீதிபதியை தான், பெயர் சொல்லாம விமர்சிக்கிறாரு பா...' எனக் கூற, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.
