PUBLISHED ON : அக் 01, 2025 12:00 AM

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம், திண்டுக்கல் அ.தி.மு.க., சார்பில் நடந்தது. இதில், திண்டுக்கல் முன்னாள் மேயரும், கட்சியின் அமைப்பு செயலருமான மருதராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மருதராஜ் பேசுகையில், 'தமிழகத்திற்கு பல திட்டங்களை கொண்டு வரவே, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ளோம். அதில் தற்போது ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது. 'ஜி.எஸ்.டி., வரி குறைப்பு யாருடைய முயற்சி என்றால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முயற்சி தான். இது சாம்பிள் தான்... இன்னும் போக போக நிறைய திட்டங்கள் வரும்...' என்றார்.
இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'ஜி.எஸ்.டி., வரியை நான் சொல்லி தான் குறைச்சாங்கன்னு பழனிசாமி கூட எங்கேயும் சொல்லலையே... இவரா அடிச்சு விடுறாரே...' என்றார்.
சக நிருபரோ, 'தலைமைக்கு ஐஸ் வைக்க வேண்டியது தான்... இவர் என்னடான்னா, ஐஸ் பாரையே வைக்கிறாரே...' என கூற, சக நிருபர்கள் சிரித்தனர்.