PUBLISHED ON : மார் 02, 2026 01:45 AM

சென்னை, திருவொற்றியூர் தொகுதி, அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திருவொற்றியூர், பெரியார் நகரில் சமீபத்தில் நடந்தது.
இதில், முன்னாள் அமைச்சர் மூர்த்தி, கவுன்சிலர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்று, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அப்போது, வரிசையில் வந்த பெண்கள் சிலர், மஞ்சள், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற, 'காட்டன்' புடவைகளை கேட்டு, அடம் பிடித்தனர். இருப்பினும், வரிசைப்படி புடவைகளை வழங்கி, அ.தி.மு.க., நிர்வாகிகள் சமாளித்தனர்.
இதை பார்த்து கொண்டிருந்த தொண்டர் ஒருவர், 'இதென்ன ஜவுளிக்கடையா... கலர் பார்த்து வாங்க...' என முணுமுணுக்க, மற்றொரு தொண்டர், 'எல்லா சேலைகளையும், 'யூனிபார்ம்' மாதிரி ஒரே, 'கலர்'ல வாங்கியிருந்தா, இந்த தொல்லை இருக்காது...' என்ற படியே நடையை கட்டினார். அதை கேட்ட கட்சியினர், 'ஆமாம்ல...' என்றனர்.

