PUBLISHED ON : பிப் 01, 2026 03:36 AM

பெரம்பலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், 60 மகளிருக்கு, 27 லட்சத்து, 75,500 ரூபாய் மதிப்பிலான நிதியுதவி மற்றும் தாலிக்கு, தலா 8 கிராம் தங்கம் வழங்கும் விழா நடந்தது.
இவற்றை வழங்கி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், 'முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கு நலன் பயக்கும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அதிலும், குறிப்பாக மகளிர் நலனையும், முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு அதிக திட்டங்களை வழங்கியுள்ளார்.
'மகளிர் நலனில் அக்கறை உள்ள முதல்வராக ஸ்டாலின் உள்ளார். மகளிர் நலன் கருதி முதல்வரால் செயல்படுத்தப்படும் இது போன்ற திட்டங்களை, உதவி பெறும் பெண்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.
கூட்டத்தில் இருந்த ஒரு பெண், 'இதனால, எங்களுக்கே ஓட்டு போடுங்கன்னு நாசுக்கா கேட்கிறாரோ...?' என முணுமுணுக்க, சக பெண்கள் ஆமோதித்தனர்.

