PUBLISHED ON : பிப் 07, 2026 02:02 AM

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், அ.தி.மு.க., மாவட்ட மகளிர் அணி சார்பில், எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது.
இதில் பங்கேற்ற, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், 'சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு முதன் முதலாக அடித்தளம் இட்டவர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான் என, சிவகாசி காங்கிரஸ் எம்.எல்.ஏ., அசோகன் கூறியுள்ளார். பாலத்திற்கு விதை போட்டது நான்தான் என்பதை, காங்., - எம்.எல்.ஏ.,வே கூறி விட்டார்' என, அவரை பாராட்டி தள்ளினார்.
இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'தி.மு.க., கூட்டணி யில் இருக்கும் அசோகன் இவரை பாராட்டுறதும், இவர் அவரை பாராட்டுறதும், என்ன கணக்குன்னே தெரியலையே... ஒருவேளை, தேர்தலின் போது ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் ஜெயிக்க வைக்க ரகசிய கூட்டணி போட்டிருப்பாங்களோ...?' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சத்தமின்றி சிரித்தனர்.

