PUBLISHED ON : அக் 14, 2025 12:00 AM

தி.மு.க.,வின் சென்னை மண்டல ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம், திருவள்ளூரில் நடந்தது. மாவட்டச் செயலரும், திருத்தணி எம்.எல்.ஏ.,வுமான சந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, கட்சியின் துணை பொதுச்செயலர் ராஜா பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், 'வரும் 2026 சட்டசபை தேர்தல் மிக முக்கியமானது. இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழியை கொண்டு வர நினைப்பவர்கள், மாநில கட்சிகளின் கதையை முடித்து கொண்டே வருகின்றனர்.
'உ.பி.,யில் மாயாவதி போன்ற பெரிய தலைவரின் அரசியல் வாழ்க்கையையே முடித்து விட்டனர். ஆம் ஆத்மி கட்சி அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி, வீட்டிற்கு அனுப்பி விட்டனர். மாநில கட்சிகள் அனைத்தையும் நசுக்கிவிட்டு, 'நாங்கள் தான் வருவோம்' என பா.ஜ., செயல்படுகிறது...' என்றார் .
இதை கேட்ட நிர்வாகி ஒருவர், 'அண்ணன், ஓவரா பயப்படுறாரோ...?' என முணுமுணுக்க, சக நிர்வாகிகள் ஆமோதித்தனர்.