PUBLISHED ON : அக் 23, 2025 12:00 AM

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே, இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தி சென்ற ஒருவரை, சேலம் உணவு கடத்தல் தடுப்பு போலீசார் இருவர் மடக்கி பிடித்தனர். இதை, மக்கள் வேடிக்கை பார்த்தனர்.
பின் அங்கு வந்த சிலர், 'பஞ்சாயத்து' பேசினர். பின்னர், 30 கிலோ அரிசியுடன், இருசக்கர வாகனத்தில் வந்த நபரை, போலீசார் அழைத்து சென்றனர். சிறிது நேரத்துக்கு பின் அப்பகுதியில் உள்ள காபி பாரில், போலீசார், அரிசி கடத்தியவர், பஞ்சாயத்து பேசியவர்கள் அமர்ந்து சிரித்து பேசியபடி, டீ, போண்டா சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
இதை பார்த்த ஒருவர், 'கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, அரிசி கடத்தியவரை பிடிச்சு கறாரா நடந்துக்கிட்டாங்க... இப்ப, எல்லாரும் கூட்டு சேர்ந்து போண்டா சாப்பிடுறாங்களே... பேரம் படிஞ்சிருச்சு போல...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தபடியே நடந்தனர்.

