PUBLISHED ON : செப் 05, 2025 12:00 AM

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில், துாய்மை பணியாளர்களுக்கு, அதன் நல வாரிய தலைவர் ஆறுச்சாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அவர் பேசுகையில், 'என்னை தோட்டி மகன் என்று தான் அழைப்பர்; இருந்தாலும், என் பெற்றோர் என்னை நன்றாக படிக்க வைத்தனர். கல்வி மட்டும் தான் சமுதாயத்தில் கவுரவமாக வாழ வைக்கும். துாய்மை பணி உங்களோடு முடிய வேண்டும்; உங்கள் குடும்ப வாரிசுகள் இந்த வேலைக்கு வரக்கூடாது.
'அதனால், தயவு செய்து குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள். துாய்மை பணியை யார் செய்வர் என்றெல்லாம் யாரும் கவலைப்பட வேண்டாம். நம் முதல்வர் ஸ்டாலின், 'ரோபோ' துாய்மை பணி திட்டத்தை கொண்டு வருவார்' என்றார்.
பார்வையாளராக இருந்த துாய்மை பணியாளர் ஒருவர், 'இந்த பொழப்பு நம்மோட போகட்டும்... நம்ம குழந்தைகளை நல்லா படிக்க வைக்கணும் பா...' என கூற, சக பணியாளர்கள் ஆமோதித்தனர்.