PUBLISHED ON : ஆக 06, 2025 12:00 AM

அ.தி.மு.க., வர்த்தக அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், துாத்துக்குடியில் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலருமான செல்லபாண்டியன் பங்கேற்றார். இவரது எதிர்கோஷ்டியான முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பங்கேற்கவில்லை.
இதில் செல்லபாண்டியன் பேசுகையில், 'துாத்துக்குடி சட்டசபை தொகுதி, அ.தி.மு.க.,வுக்கு சாதகமான தொகுதி. எம்.ஜி.ஆர்., விசுவாசிகள் அதிகம் உள்ள இந்த தொகுதி, கடந்த சட்டசபை தேர்தலில் இரண்டு ஓட்டுகள் மட்டுமே உள்ள கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
'இந்த தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்க பரிந்துரை செய்தவர்கள் நன்றாக இருக்க மாட்டார்கள்; அவர்களது குடும்பமும் நன்றாக இருக்காது. வரும் தேர்தலில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்காமல், அ.தி.மு.க.,வே போட்டியிட வேண்டும்...' என்றார்.
இதை கேட்ட நிர்வாகி ஒருவர், 'இந்த தொகுதியை போன முறை சண்முகநாதன் ஒப்புதலில் த.மா.கா.,வுக்கு ஒதுக்கி, அவங்க தோத்தும் போயிட்டாங்க... அதைத்தான் அண்ணன் குத்தி காட்டுறாரு...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.