PUBLISHED ON : பிப் 18, 2025 12:00 AM

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி சேர்மன் கவிதா. தி.மு.க.,வைச் சேர்ந்த இவரது கணவர் சங்கர், ராசிபுரம் நகர தி.மு.க., செயலர். இவர், நகராட்சி சேர்மன் போல ஆதிக்கம் செலுத்துவதாக, தி.மு.க., கவுன்சிலர்களே அதிருப்தியில் உள்ளனர்.
சேர்மன் கவிதா சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், 'திராவிட மாடல் ஆட்சியில் ராசிபுரம் பிரகாசமாக ஜொலிக்கிறது. ஆனால், சமூக ஆர்வலர்கள் சிலர் தகவல் உரிமை சட்டம், விஜிலென்ஸ் பெயரை கூறி மிரட்டி வருகின்றனர். தங்களுடைய சுய லாபத்திற்காக, தகவல் உரிமை சட்டத்தை பயன்படுத்தி, நகராட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்...' என, புலம்பி தள்ளினார்.
பேட்டி முடியவும் மூத்த நிருபர் ஒருவர், 'சமூக ஆர்வலர்களுக்கு ரகசிய தகவல் தருவதே, இவங்க கட்சி கவுன்சிலர்கள் தான்னு சேர்மனுக்கு தெரியாது போலும்...' என, முணுமுணுக்க, மற்ற நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.

