PUBLISHED ON : மே 05, 2025 12:00 AM

சென்னை, மாநகராட்சியின் மணலி மண்டலக்குழு கூட்டம், தி.மு.க., மண்டலக்குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் நடந்தது. இதில், வடக்கு வட்டார துணை கமிஷனர் கட்டா ரவி தேஜா பங்கேற்றார். சரியாக பதில் சொல்லாமல் மழுப்பிய அதிகாரிகளை வெளுத்து வாங்கினார்.
இதுதான் சரியான சமயம் எனக் காத்திருந்த, 18வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் ஸ்ரீதரன், தனது வார்டில் நிலவும் பிரச்னைகள் குறித்து, புகைப்பட ஆதாரங்களுடன் புட்டுப்புட்டு வைத்தார். கவுன்சிலரின் புகார்களை கேட்ட வட்டார துணை கமிஷனர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை, கேள்விகளால் துளைத்தெடுத்தார்.
கூட்டம் முடிந்ததும் அதிகாரி ஒருவர், 'ஏற்கனவே துணை கமிஷனர் நம்மள போட்டு வறுத்தெடுத்துட்டு இருக்காரு. இந்த கவுன்சிலர் வேற போட்டோ ஆதாரங்களை காட்டி, நம்மள காலி பண்ணிடுவாரு போலிருக்கே...' என புலம்ப, சக அதிகாரிகள் ஆமோதித்தபடியே நடந்தனர்.

