PUBLISHED ON : அக் 29, 2025 12:00 AM

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடில் அமைந்துள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு அரவை துவங்கியது. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார். கலெக்டர் பிரதாப் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அப்போது விவசாயிகள், 'கரும்பு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் வழங்க வேண்டும். நெல்லுக்கு ஊக்கத்தொகை அறிவித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது போன்று கரும்புக்கும் செய்ய வேண்டும்' என, அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து கோரிக்கைகளை கூற முற்பட்ட விவசாயிகளுக்கு, அரவை துவக்கத்திற்கு வந்திருந்தவர்களுக்கு வழங்க வைத்திருந்த சாக்லேட்களை எடுத்து அமைச்சர் வழங்கினார். அதை வாங்கி வாயில் போட்டபடியே, விவசாயிகள் அமைதியாகி திரும்பி சென்றனர்.
இதை பார்த்த மூத்த நிருபர் ஒருவர், 'அமைச்சர் திறமைசாலி தான்பா... சாக்லேட்டை போட்டு, விவசாயிகள் வாயை அடைச்சிட்டாரே...' என கூற, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.

