PUBLISHED ON : மார் 08, 2026 01:46 AM

தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், ஊதிய உயர்வு கேட்டு, கோவை டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகத்தில், சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், ஆக்ரோஷமாக பேசிய தொழிற்சங்க நிர்வாகி ஒருவர், 'மின்சாரம் போல, 24 மணி நேரமும் நாங்கள் பணிபுரிந்து வருகிறோம். குடும்பத்தை கூட சரியாக கவனிக்க முடியவில்லை. செயற்பொறியாளர்கள் பலர், மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
'விரைவில் ஊதிய உயர்வு கொடுக்கவில்லை என்றால், 2011ல் தி.மு.க., ஆட்சி மின்வெட்டு பிரச்னையால் பறிபோனதை மறக்க வேண்டாம். வரும் தேர்தலிலும் அதே நிலை உங்களுக்கு வந்து விடக்கூடாது என, எச்சரிக்கை செய்கிறோம்' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'இவங்க கரன்டை கட் பண்ணி போராட்டம் நடத்தினா, ஆட்சி ஆட்டம் கண்டுவிடுமே...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.

