PUBLISHED ON : மார் 10, 2024 12:00 AM

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக, தி.மு.க., அரசை கண்டித்து மதுரையில் நடந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில், சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'பழனிசாமி அறிவுரைகளை முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக் கொண்டிருந்தால், எந்த பிரச்னையும் ஏற்பட்டிருக்காது. தி.மு.க., கூட்டணியின் 38 எம்.பி.,க்களும், பேரிடர் நிதியை வழங்க வலியுறுத்தி ராஜினாமா செய்திருக்க வேண்டாமா?
'அ.தி.மு.க.,வில் 38 எம்.பி.,க்கள் இருந்திருந்தால், ராஜினாமா செய்திருப்போம். பேரிடர் நிதியை கொடுத்த பின் தமிழகத்திற்கு வாருங்கள் என, பிரதமரிடம் கூறியிருப்போம். தமிழகத்திற்கு, நிதி வழங்க மத்திய அரசுக்கு விருப்பமில்லை' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'அறிவுரை எல்லாம் நல்லா தான் இருக்கு... 2014 லோக்சபா தேர்தலில், 37 அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் ஜெயிச்சப்ப, ஏதாச்சும் ஒரு பிரச்னைக்கு இவங்க ராஜினாமா செஞ்சிருக்கலாமே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

