PUBLISHED ON : அக் 06, 2025 12:00 AM

மதுரை, சத்திரப்பட்டியில் உள்ள கிரசன்ட் கல்லுாரியில், சிறு தொழில்களுக்கான ஆலோசனை வழங்கும் மையத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார்.
பின், அவர் பேசும் போது, 'நான் அரசியல் பேசுவதாக நினைக்க வேண்டாம். அ.தி.மு.க., ஆட்சியில், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை; கண்டுகொள்ளவில்லை. அவர்களது பத்தாண்டு கால ஆட்சியில், 2,000 ஸ்டார்ட் அப்கள் தான் ஆரம்பிக்கப்பட்டன.
'ஆனால், எங்களின் நான்கரை ஆண்டு ஆட்சியில், 12,000 ஸ்டார்ட் அப்களை உருவாக்கியுள்ளோம். ஸ்டார்ட் அப் தரவரிசை பட்டியலில், தமிழகம் கடைசி இடத்தில் இருந்த நிலையை மாற்றி, முதலிடத்திற்கு கொண்டு வந்துள்ளோம்...' என்றார்.
இதை கேட்ட பார்வையாளர் ஒருவர், 'அரசியல் பேசலைன்னு சொல்லிட்டு, அ.தி.மு.க., ஆட்சியை குறை சொல்றாரே...' எனக் கூற, அருகில் இருந்தவர், 'குறை கூறாம இருந்தா, இவங்களுக்கு துாக்கமே வராது...' என்றபடியே, கிளம்பினார்.