PUBLISHED ON : ஜன 13, 2024 12:00 AM

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியம், நிலவாரப்பட்டி ஊராட்சியில் நடந்த, 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாமில், ஏராளமானோர் பங்கேற்று மனு அளித்தனர்.
சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., நெசவாளர் அணி தலைவர் தங்கராஜ், மனு பதிவு செய்யும் இடத்திற்கு வந்தார். அங்கிருந்த அதிகாரிகளிடம், 'ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மூணு மாசம் முன்னாடி, கலெக்டர், ஊரக வளர்ச்சி, வருவாய் துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், நடவடிக்கை இல்லை. இப்போது, எந்த அதிகாரியிடம் புகார் கொடுக்க வேண்டும்' என, கேட்டார்.
இதற்கு பதிலளிக்க தெரியாமல், மனு பதிவு செய்யும் பணியாளர்கள், 'திருதிரு'வென முழித்தனர். மனு கொடுத்து விட்டு, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவர், 'கட்சிக்காரங்க கொடுத்த மனு மீதே நடவடிக்கை எடுக்கலைன்னா, நம்ம மனுவோட நிலை என்னவாகும்...' என அப்பாவியாய் கேட்க, மற்றொரு முதியவர், 'வழக்கம் போல குப்பை தொட்டி தான்...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினார்.