PUBLISHED ON : ஜன 01, 2024 12:00 AM

சென்னை, பெரம்பூரில், தி.மு.க., சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று மளிகை, உடை மற்றும் பண உதவிகளை வழங்கினார். இதற்காக, 2,000த்துக்கும் மேற்பட்டோருக்கு, அந்தந்த பகுதி சர்ச் வாயிலாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன; அவர்கள் மட்டுமே பயனாளிகள் பகுதியில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
விழாவில், திரு.வி.க., நகர் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., தாயகம் கவி, கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் இணைந்து, பணம் உள்ள, 'கவர்'களை பயனாளிகளுக்கு வழங்கினர்.
இதை பார்த்ததும், பயனாளிகள் பகுதியில், தி.மு.க.,வினர் போட்டி போட்டு அமர தொடங்கினர். இதனால், எம்.எல்.ஏ., மற்றும் மூத்த நிர்வாகிகள் அரண்டு, கட்சியினர் அங்கிருந்து வெளியேற, 'மைக்'கில் எச்சரிக்கை விடுத்தனர்.
இதை பார்த்த மூத்த நிருபர் ஒருவர், 'பணம் வாங்குற இடத்துல நம்ம கட்சிக்காரன் மட்டும் தான் இருக்கணும் என்பது, தி.மு.க.,வினருக்கு எழுதப்படாத சட்டமாச்சே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.