PUBLISHED ON : ஜூலை 06, 2025 12:00 AM

தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை தொடர்பான பாக முகவர்கள் கூட்டம், துாத்துக்குடி சட்டசபை தொகுதியில் நடந்தது. வடக்கு மாவட்ட செயலரும், சமூக நலத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் பங்கேற்றார்.
அவர் பேசும்போது, 'ஒரு பகுதியில் 1,000 பேர் இருந்தால், அதில் குறைந்தது, 300 பேரையாவது உறுப்பினராக சேர்க்க வேண்டும். தி.மு.க., அரசு மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏதாவது ஒரு நலத்திட்டம் கிடைத்திருக்கும். சிலருக்கு விடுபட்டிருந்தாலும், அவர்களுக்கு தேவையான உதவிகளை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
'நோகாமல் நுங்கு சாப்பிடலாம் என யாரும் நினைக்க வேண்டாம். எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரங்களுக்கு உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும்...' என்றார்.
தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'நாலரை வருஷமா பதவியில இருந்து, நோகாமல் நுங்கு சாப்பிட்டது யார்னும் அமைச்சர் சொல்லியிருக்கலாமே...' என முணுமுணுக்க, சக நிர்வாகிகள் ஆமோதித்தனர்.

