PUBLISHED ON : ஜன 27, 2026 01:36 AM

சேலம் மாவட்டம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில், அ.தி.மு.க., பிரசாரக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. மேடைக்கு செல்லும் நுழைவாயிலில், 1,000 கரும்புகள், 200 வாழைத்தார்கள் கட்டி கட்சியினர் அலங்காரம் செய்திருந்தனர்.
கூட்டத்துக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வேனில் வந்தார். 100க்கும் மேற்பட்ட பெண்கள், பழனிசாமி வேன் மீது, மலர்கள் துாவி வரவேற்றனர்.
அவர் மேடைக்கு சென்றதும், அங்கிருந்த பெண்கள், அலங்காரமாக கட்டியிருந்த கரும்புகளை பிரித்து எடுத்தனர். அங்கிருந்த போலீசார் தடுத்து, 'கூட்டம் முடிந்த பின் எடுத்து செல்லுங்கள்' என அறிவுறுத்தினர். ஆனால், போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்கள், கரும்புகளை துாக்கிக் கொண்டு வீட்டுக்கு நடையை கட்டினர்.
இதை பார்த்த ஆண் தொண்டர் ஒருவர், 'பழனிசாமி பேச்சை கேட்க யாரும் வரலை போலிருக்கு...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.
