PUBLISHED ON : பிப் 12, 2026 01:27 AM

துாய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் ஆறுச்சாமி, திருப்பூரில், மாநகராட்சி துாய்மை பணியாளர்களிடம் குறை கேட்பு நிகழ்ச்சி நடத்தினார். நிகழ்ச்சி நடந்த மண்டபத்தில், ஏராளமான பெண் பணியாளர்கள் நின்று கொண்டிருந்தனர்.
இதை பார்த்த ஆறுச்சாமி, 'அம்மா, 'தினமலர்' பத்திரிகை காரங்க இருக்காங்க... உங்கள நிக்க வைச்சு குறை கேட்டாங்கன்னு செய்தி போட்டுருவாங்க; எல்லாரும் உட்காருங்க' என்று கூறி அமர வைத்தார்.
மேலும், 'வெள்ளையும், சொள்ளையுமா காரில் வந்திருக்காரே... நம்ம பிரச்னையை இவர் தீர்ப்பாரா என, நினைக்க வேண்டாம்; நிச்சயம் தீர்வு காணப்படும். மீண்டும் ஒரு முறை நீங்க, தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுங்க' என்று நயமாக பேசி முடித்தார்.
இதை கேட்ட துாய்மை பணியாளர் ஒருவர், 'நல்லா தான் பேசினாரு... கடைசியில கட்சிக்காரரா மாறிட்டாரே...' என முணுமுணுக்க, சக பணியாளர்கள் ஆமோதித்தபடியே நடந்தனர்.

