PUBLISHED ON : பிப் 21, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: 'செந்தில் பாலாஜி வழக்கில் உள்ள 212 சாட்சியங்கள், அரசு ஊழியர்களாக உள்ளனர். அவர், தற்போது அமைச்சராக இருப்பதால், சாட்சியங்கள் பயப்படுவர். ஆகவே, செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா என்பதை அறிய விரும்புகிறோம்' என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதை விட நாசுக்காக சொல்ல முடியாது. தைரியம் இருந்தால், ராஜினாமா செய்து விட்டு வழக்கை எதிர் கொள்ளுங்கள்.
செந்தில் பாலாஜி ராஜினாமா பண்ணிட்டாலும், தி.மு.க., ஆட்சிக்கு எதிராக அரசு ஊழியர்கள் சாட்சி சொல்லிடுவாங்களா, என்ன?
வி.சி., கட்சி துணை பொதுச்செயலர் வன்னியரசு அறிக்கை: அடாவடித்தனமும், ஆணவமும் அனைவருக்கும் பொறுப்பான மத்திய அமைச்சருக்கு இருக்க கூடாது. கல்வி குறித்த அக்கறை துளியும் இல்லாதவர் தர்மேந்திர பிரதான் என்பதை, அவரது நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. எடுத்தேன், கவிழ்த்தேன் என பேசி, தமிழக மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம்.
'மும்மொழி கொள்கையை ஏத்துக்க மாட்டோம்' என்று, தமிழகத்தில் அடாவடியாக பேசுவோரை விட்டுட்டு, மத்திய அமைச்சர் மீது பாய்வது சரியா?
தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., அப்துல்லா அறிக்கை: இருமொழி கொள்கை அ.தி.மு.க., முன்னெடுத்தது அல்ல. தி.மு.க.,வால் முன்னெடுக்கப்பட்டு மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. அவற்றின் மீது கை வைத்தால், மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி வரும் என்பதற்காக, தாங்களும் அந்த நிலைப்பாட்டில் இருப்பது போல் அ.தி.மு.க., நடிக்கிறது. அவர்களுக்கென்று கொள்கை நிலைப்பாடுகளோ, போராட்ட வரலாறோ இல்லை.
அ.தி.மு.க.,வின் ஒரே கொள்கை, 'தி.மு.க., ஆட்சியில் இருக்க கூடாது' என்பது தான்!

