PUBLISHED ON : மார் 30, 2025 12:00 AM

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர்
கிருஷ்ணசாமி பேட்டி: திண்டுக்கல், மாங்கரை கிராமத்தில் சாதாரண
பிரச்னைக்காக கூலிப்படையை ஏவி அங்குள்ள மக்கள்
தாக்கப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம்
நடத்த அனுமதி கேட்டோம்; அனுமதி மறுக்கப்பட்டது. பின்,
நீதிமன்றத்தில் முறையிட்டு அனுமதி
பெற்றோம். தி.மு.க.,
ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களில்
குற்றவாளிகள் தப்பிக்க விடப்படுகின்றனர்.
தமிழக காங்., துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டி.என்.முருகானந்தம் பேச்சு: குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில், அகில இந்திய காங்கிரஸ் மாநாடு ஏப்., 8, 9ல் நடக்கிறது. அம்மாநாட்டில், இந்திய அரசியலமைப்பை பாதுகாக்கவும், பா.ஜ., ஆட்சியின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில், புதிய அரசியல் உத்திகளை பிரகடனப்படுத்தி, நாடு முழுதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு புது ரத்தம் பாய்ச்சப்படும்.
உடம்புல தலை சரியா இருந்தால் தானே, மற்ற பாகங்கள் முறையாக செயல்படும்... தலை சரியில்லாத உடம்புக்கு கால்ல ரத்தம் ஏத்தி என்ன பிரயோஜனம்?
மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் பேட்டி: மக்களை பாதிக்கிற எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், மா.கம்யூ., கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும். யார் ஆட்சி என பார்க்க மாட்டோம். வரும் சட்டசபை தேர்தலில், மா.கம்யூ., கட்சி கூடுதல் எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிடும். அதை நோக்கியே எங்கள் செயல்பாடுகள் இருக்கும்.
'அடிக்கடி போராட்டங்கள் நடத்தி, ஆளுங்கட்சியை மிரட்டியே கூடுதல் சீட்கள் வாங்கிடுவோம்'னு சொல்லாம சொல்றாரோ?
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி: தமிழகத்தில், 2026ம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வரும். அப்போது, தமிழகத்தின் ஒழுக்க சீர்கேடுகள் ஒழியும். உள்துறை அமைச்சரை, தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சந்தித்துள்ளார். 'உள்துறை அமைச்சரிடம், தமிழகத்தின் பிரச்னைகள் குறித்து பேசினோம்' என, தெரிவித்துள்ளார். 'தேர்தல் நெருங்கும் போதுதான், கூட்டணி பற்றி பேசுவோம்' எனவும் தெரிவித்துள்ளார்.
அப்படி என்றால், அமித் ஷா - பழனிசாமி சந்திப்பை, திருமணத்துக்கு முந்தைய நிச்சயதார்த்தம்னு எடுத்துக்கலாமா?