PUBLISHED ON : மே 05, 2025 12:00 AM

அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டாக்டர் சரவணன் அறிக்கை:
தி.மு.க.,
ஆட்சியின் நான்காண்டுகளில், 3.50 லட்சம் கோடி ரூபாய் கடனுடன் தற்போது, 1
லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க நிர்ணயம் செய்துள்ளனர். ஐந்தாண்டுகளில், 5
லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கிய ஒரே மாநிலம் தமிழகம் என்ற நிலை
ஏற்பட்டுள்ளது. தமிழகம் தொடர்ந்து கடனில் தான் இருக்கிறது. அனைத்து
துறைகளும் நிமிர்ந்து நிற்கவில்லை; தலைசாய்ந்து தான் இருக்கிறது.
'கடன் பட்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்பதை, ஆட்சியாளர்கள் கொஞ்சம்கூட யோசித்துப் பார்க்க மாட்டாங்க போலிருக்கு!
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு தலைவர் ரத்தினசபாபதி பேட்டி:
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உரிய அதிகாரம் இருந்தும் தி.மு.க., அரசு தட்டிக்கழித்து வந்தது. சமூக நீதி பேசும் தி.மு.க., இதை செய்யவில்லை. மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் 27 சதவீத இட ஒதுக்கீடு ஓ.பி.சி.,யினருக்கு இருந்தாலும், அதில் 9 சதவீதம் அமலுக்கு வரவில்லை. தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், இதை ஏன் கேட்டுப் பெறவில்லை.
மத்திய கூட்டணி அரசில் இருந்தப்ப, தங்களது கட்சியின் அமைச்சரவை ஒதுக்கீட்டுக்கு போராடியவங்க, 9 சதவீதம் ஒதுக்கீட்டை கண்டுக்காதது ஏன்?
தமிழக காங்., - எஸ்.சி., துறையின் தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார் பேச்சு:
அரசின் பல துறைகளில் தமிழகம் முதலிடத்தை பிடித்திருக்கிறது. உயர்கல்வி சேர்க்கையில், 50 சதவீதத்தை கடந்து நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது தமிழகம். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், தமிழகத்தில் 1.43 சதவீதம் மட்டுமே. வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை கடந்த நான்கு ஆண்டுகளில், திராவிட மாடல் அரசு உயர்த்தியிருக்கிறது என்பதற்கு இதைவிட சான்று தேவையா?
தி.மு.க., அரசின் பிரசார பீரங்கியாகவே மாறிட்டாரே... சட்டசபை தேர்தலில் இவருக்கு ஒரு தொகுதி உறுதி!
தமிழக பா.ஜ., மூத்த தலைவரும், நடிகருமான சரத்குமார் பேட்டி:
இந்திய மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு, பொருளாதார முன்னேற்றம் அனைத்திலும் ஜாதி கணக்கெடுப்பு முக்கிய பங்கு வகிக்கும் என்பது நிதர்சனம். சமூக அமைப்பில் ஒவ்வொரு ஜாதிக்கும் எத்தனை மக்கள் தொகை, என்ன வசதிகள் கிடைத்துள்ளன என்பதை தனித்தனியாக, பதிவு செய்து புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டு, வெளிப்படையான தகவல்கள் கொண்ட நிரந்தர ஆவணம் உருவாகும் என்பது வரவேற்கத்தக்கது.
கடந்த, 1931க்கு பிறகு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவே இல்லை... இந்த கணக்கெடுப்பு, சமூகத்தையே புரட்டிப் போடும் என்பது நிச்சயம்!