PUBLISHED ON : டிச 09, 2025 03:21 AM

தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யும், மூத்த வழக்கறிஞருமான வில்சன் பேச்சு: டில்லி ஒரு விஷ வாயு அறையாக மாறி விட்டது. குடிமக்கள் உயிர் வாழ்வதற்காக மூச்சு திணறும் போது, பார்லிமென்ட் அமைதியாக இருக்க முடியாது. காற்று மாசுபாட்டால் டில்லி மக்கள், ஒவ்வொருவரும், தங்களது ஆயுள் காலத்தில், எட்டு ஆண்டுகளை இழந்து வருகின்றனர். பஞ்சாபில் பயிர் கழிவுகளை எரிப்பது மட்டும், டில்லி மாசுபாட்டிற்கு காரணம் அல்ல; வாகனங்கள் வெளியிடும் புகையும் தான் முக்கிய காரணம்.
நம் நாட்டின் தேசிய தலைநகரில், பல ஆண்டுகளாக தொடரும் இந்த சாபக்கேடுக்கு, மத்திய, பா.ஜ., அரசு ஒரு முடிவுரையை எழுதியே ஆகணும்!
த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: தற்போதைய மழைக்காலத்தில், 'டெல்டா' மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுதும் ஆங்காங்கே விளைநிலங்களில் மழை நீர் தேங்கி, பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. மழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விளைநிலங்களையும் கணக்கிட்டு, பயிர் நிவாரணமும், காப்பீட்டு தொகையும் கிடைக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தேர்தல் நேரத்தில் விவசாயிகள், குறிப்பா, டெல்டா விவசாயிகளின் அதிருப்திக்கு ஆளானால், ஆளுங்கட்சிக்கு தான் ஆபத்து!
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட, ஜெ., பேரவை இணை செயலர், பட்டுக்கோட்டை பூபதி பேச்சு: தமிழகத்தில் எளிமையான முதல்வராக இருந்து நல்லாட்சி புரிந்தவர், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி. அவர் விவசாயி என்பதால் தான், 'ஒக்கி' புயல், 'வர்தா' புயல் கால கட்டத்தில், விவசாயிகளுக்கான நிவாரணங்களை விரைந்து வழங்கினார். தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக, 2,500 ரூபாய் தந்து, விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்தார்.
இவ்வளவு செய்தும், 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வை மக்கள் வீட்டுக்கு அனுப்பிட்டாங்களே... எதுவுமே செய்யாத, தி.மு.க., அரசுக்கு என்ன நடக்கப் போகுதோ?
மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் அறிக்கை: 'திருப்பரங்குன்றம் மலை ஹிந்துக்களுக்கு சொந்தமானது' என, தமிழக, பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, 'அளந்து' விட்டிருக்கிறார். அனைத்து ஹிந்துக்களுக்குமா அல்லது குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த ஹிந்துக்களுக்கு மட்டுமா என்பதை அவர் விளக்க வேண்டும். அனைத்து ஹிந்துக்களுக்கும் என அவர் சொன்னால், பட்டியல் ஜாதியைச் சேர்ந்த ஹிந்துக்கள், கருவறைக்குள் சென்று பூஜை செய்வதற்கு அண்ணாமலை நடவடிக்கை எடுப்பாரா?

