PUBLISHED ON : ஏப் 21, 2026 01:28 AM

தமிழக பா.ஜ., துணை தலைவர் குஷ்பு பேச்சு: தொகுதி மறுவரையறையை இதுவரை யாரும்
சாதிக்காத நிலையில், 12 ஆண்டுகளில் பிரதமர் மோடி சாதித்து காட்டியுள்ளார்.
மத்திய அரசு எது கொண்டு வந்தாலும், ஸ்டாலின், தோல்வி பயத்தால் மக்களை திசை
திருப்ப இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார். ஒரு முதல்வருக்கு இது நல்லது
இல்லை. பெண்களுக்கான, 33 சதவீத இட ஒதுக்கீடு வந்த நிலையில், அதற்கு
வாழ்த்து தெரிவிக்காமல், மாறாக கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்துகிறார்.
பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் தி.மு.க.,வுக்கு மட்டுமில்லை;
நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகளுக்கே விருப்பமில்லை!
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேச்சு: தி.மு.க., ஆட்சியின் ஐந்தாண்டுகளில், சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு போனது. பாலியல் வன்கொடுமை, படுகொலைகள், ஆதாய கொலைகள் ஏராளமாக நடந்துள்ளன. அதிக கல்லுாரிகளை கொண்ட கோவையில், தி.மு.க.,வினர் கஞ்சா போதை பொருளை விற்கின்றனர். தி.மு.க., ஆட்சியில், கோவைக்கு எந்த திட்டத்தையும் கொடுக்கவில்லை. அ.தி.மு.க., காலத்தில் துவங்கிய திட்டங்களையே புதிதாக தி.மு.க., செய்ததை போல் திறந்து வைத்துள்ளனர்.
அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கிய திட்டங்களை கிடப்பில் போடாம, செய்து முடிச்சாங்களே என்று சந்தோஷப்படுங்க!
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் பேட்டி: கடந்த, 2007ல் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வெளியானது. அப்போது, மத்திய காங்., கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றிருந்த தி.மு.க., அரசு, நீதிமன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட மறுத்தது. 2011ல், ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், உச்ச நீதிமன்றம் சென்று, அந்த உரிமையை பெற்று தந்தார். பழனிசாமி ஆட்சியில் தான் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு, உரிமை உறுதியாக்கப் பட்டது.
என்னதான் அரசிதழில் தீர்ப்பை வெளியிட்டாலும், அதை இன்று வரை கர்நாடகா மதித்து தண்ணீர் திறக்க மாட்டேங்குதே!
பா.ம.க., தலைவர் அன்புமணி பேச்சு: முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு பெண் கூட ஓட்டு போடக்கூடாது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை கருப்பு சட்டை போட்டு எரிக்கிறார். ஒரு முதல்வர் சட்ட மசோதாவை எரித்தால், அது குற்றம். தேர்தல் ஆணையம் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். பெண் களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நகலை, ஒரு முதல்வர் எரித்தது தேச துரோக செயல். இதற்கு சாதாரணமாக ஜெயிலில் போடுவர்.
வாஸ்தவம் தான்... ஆனா, முதல்வர் பதவியில் இருப்பவர் மீது நடவடிக்கை எடுக்க எந்த போலீசாருக்கு துணிச்சல் இருக்குது?

