PUBLISHED ON : மே 10, 2026 12:00 AM

பள்ளிக்கல்வி துறை முன்னாள் அமைச்சர் மகேஷ் பேட்டி: மும்மொழி கொள்கையை
வலியுறுத்தும் மத்திய அரசின் பி.எம்., ஸ்ரீ திட்டத்தை வேண்டாம் என்று பல
நேரங்களில் சொல்லி இருக்கிறோம். இருமொழி கொள்கையே போதுமானது; மும்மொழி
கொள்கையை ஏற்க மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளோம். புதிதாக ஆட்சிக்கு
வருபவர்கள், மத்தியில் இருந்து எப்படி மிரட்டல் வந்தாலும் பயந்துவிடக்
கூடாது. நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுக்கு, ஒட்டுமொத்த தமிழகமே உங்கள்
பின்னால் இருக்கும்.
'எங்களை மாதிரியே மத்திய அரசுடன் மல்லுக்கு நின்று
நிதியுதவி கிடைக்காம திண்டாடுங்க'ன்னு சொல்லாம சொல்றாரோ?
மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் அறிக்கை: தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டதால், தேர்தலை ரத்து செய்யக்கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தேன். தேர்தல் முடிந்த பின், ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்களை விசாரணைக்கு உள்ளாக்காமல், ஓட்டுக்கு பணம் பெற்ற மக்களிடம் விசாரிக்காமல், புகார் கொடுத்த என்னிடம் விசாரணை நடத்தினர். ஜனநாயகத்தை பாதுகாக்க தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்பேன். ஓட்டுக்கு பணம் கொடுத்த நிலை மாறி, இன்று எம்.எல்.ஏ.,க்களை பணம் கொடுத்து வாங்குற சூழல் வந்துடுச்சு...
இன்னும் பழைய சம்பவத்தை கிளறிட்டு இருக்காரே!
தமிழக காங்., பொதுச்செயலர் எஸ்.டி.நெடுஞ்செழியன் பேச்சு: போலி திராவிடம் பேசும் திராவிட கட்சிகளுக்கு சாவுமணி அடிக்க ராகுல், விஜய் முடிவு செய்து விட்டனர். 'காங்கிரஸ் முதுகில் குத்தி விட்டது' என, தி.மு.க.,வினர் கூறுகின்றனர். பா.ஜ.,வின் பினாமியான அ.தி.மு.க.,வுடன் இணைந்து தி.மு.க., ஆட்சி அமைக்க ஆசைப்பட்டது துரோகமில்லையா. தமிழகத்தில் திராவிட கட்சிகளை, வேரோடும் வேரடி மண்ணோடு வீழ்த்துவதற்கும், தமிழகத்தை முன்னேற்றுவதற்கும் ராகுல் - விஜய், 'காம்போ' ஆட்டம் ஆரம்பமாகி விட்டது.
'மட்டன் பிரியாணி, சிக்கன் 65' என்ற ஹோட்டல், 'காம்போ' மாதிரி, அரசியலையும் மாத்திட்டாரே!
வி.சி., கட்சியின் துணை பொதுச்செயலர் சிந்தனை செல்வன் அறிக்கை: விஜய்க்கு கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா? 'தி.மு.க.,வை ஒழித்துக்கட்ட வேண்டும். மன்னராட்சி' என்றெல்லாம் பேசிவிட்டு, தி.மு.க., தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி கண்டுள்ள இடதுசாரிகளையும், வி.சி.க., ஆதரவையும் கேட்டு அழைக்கும் விஜய்க்கு கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா?
அரசியலில் கூச்சம் எல்லாம் பார்த்தால், ஆட்சி அதிகாரத்துக்கு வர முடியுமா...? இதை உணர்ந்ததால தான், காங்., கட்சி முதல் ஆளா விஜய் அணிக்கு தாவிடுச்சு!

