PUBLISHED ON : ஜூன் 09, 2026 12:00 AM

இந்திய குடியரசு கட்சி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான செ.கு.தமிழரசன் பேட்டி:
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்ததும், ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை சமூக நீதித்துறை என மாற்றியுள்ளனர். கடந்த தி.மு.க., ஆட்சியில், ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதிகளுக்கு சமூக நீதி விடுதிகள் என பெயர் சூட்டினர். அதன் தொடர்ச்சியாக, சமூக நீதித்துறை என்ற பெயரை வைத்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பதை முதல்வர் விஜய் தெளிவுபடுத்த வேண்டும்.
'பூவை பூன்னும் சொல்லலாம்; புஷ்பம்னும் சொல்லலாம்' என்பது மாதிரி, பெயரில் என்ன இருக்குது... துறையின் அமைச்சர் திறமையா செயல்படுறாரா என்பது தானே முக்கியம்!
மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் அறிக்கை:
ஆர்.எஸ்.எஸ்., ஏற்கனவே 2,500 அமைப்புகளை வழி நடத்துகிறது. அண்ணாமலை தொடங்கும் அமைப்பு, 2,501 அவ்வளவுதான். பா.ஜ., என்ற கட்சி தமிழகத்தில் எடுபடவில்லை. எனவே, பெயரை மாற்றி வியாபாரத்தை வெற்றிகரமாக்க முடியுமா என, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆசியுடன் முயற்சிக்கிறார் அண்ணாமலை. அவரது இயக்கத்தில் லட்சக்கணக்கானோர் சேர்ந்திருப்பதாக கூறுவதெல்லாம் பொய்; பா.ஜ.,வினர் அதில் இணைக்கப்படுகின்றனர் என்பதே உண்மை.
நாடு முழுக்க உங்க கட்சி தேய்பிறையாகிட்டே போகுதே... அதை பத்தி என்றைக்காவது கவலைப்பட்டிருக்கீங்களா?
தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., வில்சன் பேச்சு:
தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி இருந்த போது தான், சமூகநீதி நிலைநாட்டப்பட்டது. இடஒதுக்கீட்டு கொள்கைகள் பாதுகாக்கப்பட்டன; மொழி உரிமைகள் கிடைத்தன. கூட்டாட்சி தத்துவம் செயல்படுத்தப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றம் அடைந்தனர். சமூகநலன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் முன்னுதாரண மாநிலமாக தமிழகம் மாறியதற்கு, கருணாநிதியின் தொலைநோக்கு பார்வையே காரணம்.
அப்படி என்றால், 'கடந்த ஐந்து வருஷமா முதல்வராக இருந்த ஸ்டாலின் எதுவுமே செய்யலை'ன்னு சொல்றாரா?
அகில இந்திய இளைஞர் காங்., செயலர் லெனின் பிரசாத் அறிக்கை:
காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செய்ய சென்ற மாநில காங்., தலைவர் செல்வப்பெருந்தகையை பார்த்து, நாகரிகமற்ற முறையில் தி.மு.க.,வினர் கூச்சலிட்டுள்ளனர். 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு' எனக் கூறிய அண்ணாதுரை வழி வந்த தி.மு.க.,வினர், தங்களை விட்டு காங்கிரசார் ஏன் விலகினர் என்ற உண்மையை உணராமல் வெற்று கூச்சலிடும் அநாகரிக செயலை, ஸ்டாலின் கண்டிக்காமல் அமைதி காப்பது ஏன்?
இவர் வேற... தன் தொண்டர்கள் செயலுக்கு ஸ்டாலின் பெருமைப்படாமல் இருப்பதே பெரிய விஷயம்!
