PUBLISHED ON : ஜூன் 21, 2026 12:00 AM

தமிழக வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் பேட்டி: எங்களுக்கு வெற்றி கிடைப்பதற்கு குழந்தைகள் தான் காரணம். அவர்களின் மகிழ்ச்சிக்காக, முதல்வர் விஜய் பிறந்தநாளை ஒட்டி சென்னை வண்டலுார், சேலம் குரும்பப்பட்டி, வேலுார் அமிர்தி ஆகிய இடங்களில் உள்ள வன உயிரியல் பூங்காக்களை பொதுமக்கள், இன்றும் நாளையும் இலவசமாக பார்வையிடலாம். இதற்கான கட்டணத்தை, என் சகோதரருடன் இணைந்து நடத்தும் வாழ்முனி நாயக்கர் குடும்ப அறக்கட்டளை ஏற்கும்.
கட்டணத்தை அரசு தலையில் கட்டாமல், தன் சொந்த செலவில் செய்யும் இவரை பாராட்டலாம்!
அ.தி.மு.க.,வில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: 'தி.மு.க., ஆட்சியில், 2006 - 2021 வரையிலான 15 ஆண்டு கால நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிலையில், த.வெ.க., அரசு மட்டும், 2021 - 26 வரையிலான தி.மு.க., ஆட்சி நிதி நிலையை மட்டும் வெள்ளை அறிக்கையாக வெளியிட்டது, முந்தைய அ.தி.மு.க., அரசை காப்பாற்றவா' என, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பி உள்ளார். ஏற்கனவே, 2021 வரையிலான நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிலையில், மீதமுள்ள ஐந்து ஆண்டுகளுக்கான நிதி நிலை தானே வெள்ளை அறிக்கையில் இடம்பெறும். அரைத்த மாவையே அரைக்கும்படி தங்கம் தென்னரசு சொல்வதில் என்ன, 'லாஜிக்' உள்ளது?
தங்களது ஆட்சியின் அலங்கோலங்களை அம்பலப் படுத்திட்ட பதற்றம் தான் தங்கம் தென்னரசு பேச்சில் தெரியுது!
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிக்கை:
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், அரசியலில் வெற்றி மேல் வெற்றி பெற வேண்டும். அவர், நாட்டின் பிரதமராக பொறுப்பேற்பதற்கு இயற்கை தாயின் அருளை வேண்டுகிறேன். அந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். உங்கள் பிறந்தநாள் இன்னும் பல நுாறு முறை வரட்டும் என, என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
த.வெ.க., - காங்., கூட்டணிக்கு இவரும் போக போறதால, ராகுலுக்கு ஏகத்துக்கும் வாழ்த்துப்பா பாடுறாரோ?
காங்., மூத்த தலைவர் சிதம்பரம் பேட்டி:
'தேசிய அளவில் பா.ஜ., செய்யக்கூடியதை தான், மாநில அளவில் த.வெ.க., செய்கிறது. பா.ஜ.,வின் நகலாக த.வெ.க., உள்ளது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறார்; இது தவறு. பார்லிமென்ட் எம்.பி.,க்கள் மற்றும் சட்டசபை எம்.எல்.ஏ.,க்களில் பதவி விலகாமல் இருப்பவர்களையே பா.ஜ., ஈர்க்கிறது. எனக்கு தெரிந்த வரை த.வெ.க.,வில் சேர்ந்தவர்கள், பதவி விலகிவிட்டு தானே சேர்கின்றனர். அது வித்தியாசம் இல்லையா?
ஒரு கட்சி சார்பில் ஓட்டுகள் வாங்கி ஜெயிச்சுட்டு ராஜினாமா பண்றது, ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றியது மாதிரி ஆகாதா?
