PUBLISHED ON : ஜூன் 28, 2026 12:00 AM

தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் பேட்டி:
திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்த பின்னரும், திருச்சி மாநகரில் போக்குவரத்து நெருக்கடி தீரவில்லை. இப்பிரச்னையை தீர்க்க, மூன்று துறைகள் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த பஸ் நிலையத்தை, தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு, அவரது நிலங்கள் இருக்கும் பகுதியில் கட்டியதா கடந்த ஆட்சியில எதிர்க்கட்சிகள் புகார் சொன்னாங்க... அதை பத்தியும் விசாரிச்சு பாருங்க!
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கை:
இந்தியா எத்தனையோ பிரதமர்களை கண்டிருக்கிறது. குறுகிய காலமே அப்பதவியில் இருந்தாலும், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக பிரதமர் பதவியையே துச்சமாக கருதி வி.பி.சிங் காட்டிய உறுதி என்றென்றும் நினைத்து போற்றத்தக்கது. தி.மு.க.,வை போலவே ஆட்சியும், பதவிகளும் முக்கியமல்ல. சமூகநீதி கொள்கையே முக்கியம் என வாழ்ந்து காட்டியவர் வி.பி.சிங்.
கடந்த 1999ல் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த நீங்க, மத்திய பா.ஜ., கூட்டணி அரசு உங்க ஆட்சியை கலைச்சிடுமோ என்ற பயத்தில் தானே, அவங்களுடன் கூட்டணி சேர்ந்தீங்க... அப்ப, கொள்கைகள் எல்லாம் எங்க போச்சு?
தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் பேச்சு:
தமிழக தேர்தலில் பா.ஜ., தோல்வி அடைந்திருக்கலாம். பா.ஜ.,வின் சித்தாந்தம், தேசிய நலன் கொண்ட கொள்கை தோல்வி அடையாது. நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சிறுபான்மை சமுதாய மக்கள் அதிகம் வாழும் அசாம், திரிபுரா, கோவாவிலும் பா.ஜ., ஆட்சியில் இருக்கிறது. பா.ஜ., அனைத்து மக்களுக்கான கட்சி. தமிழகத்தில் பா.ஜ.,வின் தோல்விக்கு, எங்கள் கொள்கைகள் மக்களை சென்றடையாததே காரணம்.
'தமிழகத்தில் எங்க கட்சியின் தோல்விக்கு, மாநில தலைவராக இருந்த நயினார் நாகேந்திரன் தான் காரணம்'னு சுத்திவளைச்சு சொல்றீங்களோ?
தமிழக வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு:
தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பின் ஒரு மாற்றத்தை உருவாக்க, இயற்கையால் வழங்கப்பட்ட கொடையாக முதல்வர் விஜய் விளங்குகிறார். எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆகியோருடன் நான் பயணித்தேன்; அவர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். த.வெ.க.,வில் இணைந்தேன்; இன்று தமிழகத்தில் ஆட்சி மாறியுள்ளது.
நீங்க சொல்றத பாத்தா, 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜய் எல்லாம் என்னால் தான் முதல்வர்கள் ஆனாங்க'ன்னு சொல்லாம சொல்றீங்களோ என்ற எண்ணம் தான் வருது!
