PUBLISHED ON : ஜூலை 27, 2026 12:56 AM

மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் அறிக்கை:
சமீபத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் சபரிவர்மன் என்ற மாற்றுத்திறனாளி இளைஞரை, போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று சித்ரவதை செய்து, படுகொலை செய்தனர். தற்போது, துாத்துக்குடி மாவட்டத்தில், போலீஸ் காவலில் அருணாச்சலம் என்ற இளைஞர் உயிரிழந்தது கண்டனத்துக்குரியது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட போலீசார் அத்தனை பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அருணாச்சலம் உயிரிழப்பு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
த.வெ.க., அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தணும்னு, சில போலீசார் திட்டமிட்டு செயல்படுறாங்களோ என்று முதலில் விசாரிக்கணும்.
காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் அறிக்கை: கல்வித்துறையில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து போராடிய ராகுல் டில்லியில் கைது செய்யப்பட்டதை கண்டித்து, சென்னையில் போராட்டம் நடத்திய காங்., நிர்வாகிகளும், தொண்டர்களும் கைது செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாணவர்களின் எதிர்காலத்திற்காகவும், ஜனநாயக உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பவர்களை கைது செய்து முடக்க நினைக்கும் அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம்.
'ஆளுங்கட்சி கூட்டணியில் அங்கம் வகிப்பதால், போராட்டம் நடத்தும் எங்களை கைது பண்ணக்கூடாது'ன்னு, சட்டத்தில் இருந்து விலக்கு கேட்கிறாரோ?
தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி பேச்சு:
டில்லியில் போராடிய இளைஞர்கள், மத்திய அரசின் கொடூரமான போலீஸ் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். தங்கள் வாழ்க்கைக்காக போராடும் இளைஞர்கள் அளித்த மனுக்களை படித்து பார்ப்பதற்கு கூட நேரமில்லை என மத்திய அரசு கூறியது, நாட்டில் நீதியின் நிலை என்ன என்பதை தான் காட்டுகிறது.
தமிழகத்தில் கடந்த தி.மு.க., ஆட்சியில், உரிமைகளுக்காக போராடிய கண் தெரியாத மாற்றுத்திறனாளிகளை கைது பண்ணி, சென்னைக்கு வெளியில் இறக்கிவிட்டு அலைக்கழிச்சதை எல்லாம் இவங்க மறந்துட்டாங்களோ?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி:
தமிழகத்தில், 60 ஆண்டுகளுக்கு பின், காங்கிரசாரை தன் அமைச்சரவையில், முதல்வர் விஜய் சேர்த்துள்ளார். எனவே, கர்நாடக காங்., அரசுக்கு அழுத்தம் கொடுத்து, காவிரி நீரை பெற்று தந்திருக்க வேண்டும். ஆனால், அவரது தலைமையிலான த.வெ.க., அரசு துாங்கிக் கொண்டு இருக்கிறது. அவரது அமைச்சர்கள் ஜனநாயகன் சினிமாவை பார்த்து ரசித்து கொண்டிருக்கின்றனர்.
அமைச்சர்களா இருந்தா, அவங்களுக்கு ஒரு மூணு மணி நேரம் பொழுதுபோக்கு கூட இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறாரா?
