PUBLISHED ON : ஜூலை 31, 2026 12:13 AM

வி.சி.க.,வைச் சேர்ந்த, தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு பேட்டி:
தமிழர் விரோத நடவடிக்கையில் மத்திய அரசும், கவர்னர் அர்லேக்கரும் ஈடுபடுகின்றனர். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடியதன் வாயிலாக, தமிழுக்கு அவமானத்தை ஏற் படுத்தியுள்ளார் கவர்னர். அந்த விழாவைப் புறக்கணித்ததன் வாயிலாக, தமிழக அரசின் கண்டிப்பை வெளிப்படுத்தி உள்ளோம்.
நீங்க புறக்கணிச்சிட்டதால மட்டும், அந்த விழா நடக்காம போயிடுச்சா என்ன?
தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி பேச்சு: மக்களுக்கான களப்போராளிகளை கொண்டாடுவதை விட, 'ரீல்ஸ்' எடுப்பவர்களை தான் சமுதாயம் அதிகமாக கொண்டாடுகிறது. 'நீட்' தேர்வு எதிர்ப்பு, தமிழகத்திற்கு புதிதல்ல. துவக்கம் முதலே, ஆர்ப்பாட்டம், போராட்டம், கையெழுத்து இயக்கம் என பல வடிவங்களில், நீட்டுக்கு எதிராக தி.மு.க., போராடுகிறது.
'நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களிடம் இருக்கு'ன்னு, 2021ல் சொன்ன இவர், இன்று வரை அந்த ரகசியத்தை சொல்ல மாட்டேங்கிறாரே!
காங்., கட்சியின் முன்னாள் மூத்த தலைவரும், அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு இயக்கத் தலைவருமான எம்.எஸ்.பிட்டா பேட்டி: நாட்டில், 12 -ஆண்டுகளுக்கு முன், அனைத்து பகுதிகளிலும் குண்டு வெடிப்புகள் நடந்தன. நாடு முழுதும் பயங்கரவாதம் இருந்தது. அதை, முடிவுக்கு கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. அவர் ராஜினாமாவை சிலர் கேட்கின்றனர். பிரதமர் மோடி ராஜினாமாவை கேட்போர், காஷ்மீர், மும்பை, டில்லி என அனைத்து இடங்களிலும் குண்டுகள் வெடித்த நாட்களை நினைத்துப் பாருங்கள்.
எல்லாரும், 'பழைய வசந்த காலம் மீண்டும் வரணும்'னு விரும்புவாங்க... ஆனால், மோடி ராஜினாமாவை கேட்கிறவங்க, 'கசந்த காலம் திரும்பணும்'னு நினைக்கிறாங்களோ?
பா.ஜ., விவசாய அணியின் தமிழக தலைவர் ஜி.கே.நாகராஜ் பேச்சு: டில்லி போராட்டக் களத்தில், 'நீட்' தேர்வு மாணவர்கள் 1 சதவீதம் பேர் தான் இருந்தனர். ஆனால், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சியினரோடு, 99 சதவீதம் தேசவிரோத கும்பல் தான் ஊடுருவி இருந்தது. ஒரு வாகனத்தில் முழுமையாக கற்கள் நிரப்பப்பட்டு, கலவர நோக்கத்தோடு போராட்டக் களத்தில் ஊடுருவினர். நீட் தேர்வு குறித்த மாணவர்கள் மீதான அக்கறையைத் தாண்டி, இப்போராட்டத்தை தங்கள் சுயலாபத்திற்கு பயன்படுத்துவதிலேயே காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் அக்கறை காட்டின.
வாஸ்தவம் தான்... லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் எல்லாம், சாதாரண வட்டச் செயலர் போல், சாலையில் படுத்து உருண்டதிலேயே இது தெரிஞ்சிடுச்சே!
