PUBLISHED ON : ஆக 17, 2026 01:50 AM

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு: 'மகளிர் உரிமைத் தொகையாக மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும்' என வாக்குறுதி கொடுத்து, த.வெ.க., ஆட்சிக்கு வந்தது; ஆனால், அதை நிறைவேற்றவில்லை. த.வெ.க., எப்படி திடீரென ஆட்சிக்கு வந்ததோ, அதேபோல் திடீரென ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழ்நிலை தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது; அது ரகசியம். பழனிசாமி முதல்வர் ஆன பின், மக்களே அதை புரிந்து கொள்வர்.
தி.மு.க., தயவில் பழனிசாமியை முதல்வராக்கும் முயற்சியை மறுபடியும் துவங்கிட்டீங்களோ?
இந்திய கம்யூ., மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன் பேட்டி: 'நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, கடந்த ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது; இந்த ஆட்சியிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டசபை தீர்மானங்களுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும். நீட் தேர்வை பொறுத்தவரை, ரத்து செய்யவில்லை என்றாலும், தமிழகத்துக்கு மட்டுமாவது விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
நாடு முழுக்க நடக்கும் நுழைவுத்தேர்வில், ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்பது, மூத்த அரசியல்வாதியான உங்களுக்கு தெரிஞ்சும், அரசியலுக்காக இப்படி பேசலாமா?
தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு:
த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் வாயில் உண்மையே வராது. நாங்கள் தொடக்கத்திலிருந்தே பா.ஜ.,வை எதிர்த்தவர்கள்; இன்றும் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறோம். நிர்மல்குமார் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரி பேசுவார். அவர், முதலில் பா.ஜ.,வில் இருந்தார்; அ.தி.மு.க.,வில் இருந்தார்; இப்போது த.வெ.க.,வில் இருக்கிறார். இந்த ஆட்சி முடிவதற்குள், எந்த கட்சிக்கு போவார் என தெரியவில்லை.
இன்று, உங்க கட்சியில் செல்வாக்கா இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் பலரும், அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவங்க என்பதை மறந்துட்டீங்களோ?
காங்கிரஸ் கலை பிரிவு தமிழக துணை தலைவர் மயிலை அசோக்குமார் பேச்சு:
காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற த.மா.கா., தலைவர் வாசன், 'இனி காங்கிரசுடன் இணைந்தே செயல்படுவோம்' என கூறியிருப்பது, தேனில் ஊறிய பலாப்பழம் போலிருக்கிறது. த.மா.கா.,வை வரவேற்க, காங்கிரஸ் தயாராக இருக்கிறது. தமிழகத்தில் காங்., கட்சியை வலிமையாக்க, த.மா.கா.,வை இணைத்துக் கொள்வோம்.
ஆனா, காங்கிரசில் வாசன் கோஷ்டின்னு ஒண்ணு புதுசா முளைச்சிடுமே... பரவாயில்லையா?
