PUBLISHED ON : ஆக 22, 2026 02:54 AM

பா.ஜ., உறுப்பினரும், நடிகையுமான கஸ்துாரி அறிக்கை:
'எம்.எல்.ஏ.,க்களுக்கு டிரைவருடன் கூடிய கார், கார் பராமரிப்புக்கு மாதம் 75,000 ரூபாய், டிரைவர் படி, 25,000 ரூபாய் வழங்கப்படும்' என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். லீமா ரோஸ் மார்ட்டின், உதயநிதி, ஆதவ் அர்ஜுனா, எ.வ.வேலு, செங்கோட்டையன், வன்னியரசு, ரேவந்த் சரண் போன்ற மிகவும் ஏழை எம்.எல்.ஏ.,க்களுக்கு ஆடம்பர வசதிகளை செய்து தர, பொது மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட உள்ளதா; என்ன அபத்தம் இது? பெரும்பான்மை மக்களை போல எம்.எல்.ஏ.,க்களும் பஸ், மெட்ரோ போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் அல்லது நடந்து செல்ல வேண்டும்.
நீங்க சொல்றது சரி தான்... பொது போக்குவரத்தை மக்கள் பிரதிநிதிகள் பயன்படுத்தினால் தானே, பொதுமக்களின் சிரமங்கள் புரியும்!
ம.தி.மு.க.,வைச் சேர்ந்த, திருச்சி எம்.பி., துரை வைகோ பேட்டி: த.வெ.க., ஆட்சியில், எந்த அதிகாரியும் லஞ்சம் வாங்குவதில்லை. கட்சி நிதி என்று கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்குவது குறைந்துள்ளது. மக்கள் பிரதிநிதிகளுக்கு குறைந்தபட்ச பொருளாதார வசதிகள் இருந்தால் தான், அவர்கள் முழுமையாக மக்கள் பணியில் ஈடுபட முடியும். அதனால், எம்.எல்.ஏ.,க்களுக்கு கார் வழங்குவதில் எந்த தவறுமில்லை.
'பொருளாதார வசதிகளுடன் இருக்கிறவங்க, லஞ்சம் வாங்க மாட்டாங்க' என்ற தத்துவத்தை எந்த பல்கலைக்கழகத்தில் படிச்சீங்க?
த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பேச்சு:
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜுக்கு நிறைய நெருக்கடிகள் வந்தன. 'ஐ.ஆர்.எஸ்., அதிகாரிக்கு தானே பெண் கொடுத்தோம். அரசியலுக்கு போகிறேன் என்கிறீர்களே?' என, அவரது குடும்பத்தினரே கேட்டனர். 'ஐ.ஆர்.எஸ்., பதவியை விட, நம் கட்சியில் நீங்கள் பெரிய இடத்துக்கு செல்வீர்கள்; தைரியமாக பணியில் இருந்து விலகி வாருங்கள்' என, முதல்வர் விஜய் கூறினார். இதோ, இப்போது அருண்ராஜ் அமைச்சராக இருக்கிறார்.
வாஸ்தவம் தான்... அதேநேரம், விஜய்க்காக தெருத் தெருவா போஸ்டர் ஒட்டிய இன்னும் பலர், எந்த அங்கீகாரமும் கிடைக்காம தவிச்சிட்டு இருக்காங்க தெரியுமா?
காங்கிரஸ் தமிழக முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி:
'இண்டி கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது; தி.மு.க., இல்லை' என, கனிமொழி கூறியுள்ளார். 'நாங்கள் லட்சியவாதிகள், கொள்கைவாதிகள்' என தி.மு.க.,வினர் கூறுகின்றனர். கேரளாவில் மா.கம்யூ., கட்சியை நாங்கள் தோற்கடித்தோம். ஆனால், அக்கட்சி இண்டி கூட்டணியில் தீவிரமாக செயல்படுகிறது. தேர்தல் வேறு; கொள்கை வேறு என்பதை மா.கம்யூ., கட்சி உணர்ந்துள்ளது.
'கொள்கையில்லாத தி.மு.க., வுடன் இனி கூட்டணியே வைக்க மாட்டோம்'னு, உங்களால துணிச்சலா சொல்ல முடியுமா?
