PUBLISHED ON : ஆக 26, 2026 12:00 AM

சென்னை மயிலாப்பூர் தொகுதி, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மயிலை வேலு அறிக்கை:
பதவி என்பது நிரந்தரமானதல்ல; தொண்டர்கள் நிரந்தரமானவர்கள். ஒரு நாள், நாற்காலியை இன்னொருவரிடம் ஒப்படைக்க வேண்டியது இயற்கை. அந்த நாற்காலியில், நம்மை விட சிறப்பாக செயல்படக்கூடிய ஒருவரை அமர வைப்பது தான், ஒரு தலைவரின் சாதனை. தி.மு.க., மூத்த நிர்வாகிகள் வழி விடுங்கள்; ஆனால், விலகி விடாதீர்கள். பதவியை ஒப்படையுங்கள்; அனுபவத்தை ஒப்படைக்க மறக்காதீர்கள்.
இளைஞர்களை முன்னால் நிறுத்துங்கள்; பின்னால் இருந்து அவர்களின் பலமாக மாறுங்கள். 'தி.மு.க., தலைவர் பொறுப்பில் இருந்து ஸ்டாலின் விலகணும்'னு இவர் கேட்கிறாரோ?
தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை:
சட்ட சபையின் மரபும், விதிகளும் அறியாத அரிதார கட்சியின், 'அப்ரன்டிஸ்'கள் தடித்த வார்த்தைகளை பேசி, தங்கள் இயலாமையை மறைக்க தகராறு செய்கின்றனர். இதனால், பேசப்பட்டதை விட வெட்டி வீசப்பட்டதே அதிகம் என்ற அளவுக்கு, கத்திரிக்கோலோடு தவிக்கும் சபாநாயகரின் நிலையோ பரிதாபமாக இருக்கிறது.
உங்க கட்சி உறுப்பினர்கள் சட்டசபைக்குள்ள பேசுவதை விட, வெளிநடப்பு பண்ணிட்டு வெளியில வந்து பேசுறது தானே அதிகமா இருக்குது!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி:
அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க., - அ.ம.மு.க.,வில் இருந்தவர்களை அழைத்துச் சென்று த.வெ.க.,வில் சேர்த்து தற்போது நடுரோட்டில் நிறுத்தியுள்ளார். த.வெ.க.,வில் செங்கோட்டையனின் நிலை என்னவென்று எனக்குத் தெரியும்.அ.தி.மு.க., அழியாது, மீண்டும் வலுப்பெறும்; செங்கோட்டையன் வீழ்வார்.
அ.தி.மு.க., மீண்டும் வலுப்பெறும்னு சொல்ற இவரோட நம்பிக்கை எந்த அளவுக்கு பலிக்கும் என்பதை நினைத்தால், சிரிப்பு தான் வருகிறது.
நடிகரும், அ.தி.மு.க., நட்சத்திர பேச்சாளருமான ராமராஜன் பேட்டி:
தற்போது தீவிர அரசியலில் ஈடுபடுவதை நிறுத்தி விட்டேன். சாமானியன் படத்திற்கு பின், மீண்டும் சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். நான் ஹீரோவாக நடித்த நான்கைந்து படங்களில், கவுதமி ஹீரோயினாக நடித்தார்.
அவருக்கு கூட அ.தி.மு.க.,வில் பதவி கிடைத்தது. எனக்கு பொதுக்குழு உறுப்பினர் உட்பட எந்த பதவியும் கிடைக்கவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீதுள்ள விசுவாசத்தால், அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டராக இருக்கிறேன்.
மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வச்சிருக்கும் உங்களை பயன்படுத்திக்காதது, அ.தி.மு.க.,வுக்கு பேரிழப்பு தானோ!
