PUBLISHED ON : செப் 08, 2026 12:00 AM

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி:
அ.தி.மு.க., - தி.மு.க., - த.வெ.க., ஆட்சி என்ற பாகுபாடு இல்லாமல், எல்லா ஆட்சியிலும் நல்ல அதிகாரிகளும் உள்ளனர்; தவறான அதிகாரிகளும் உள்ளனர். ஆனால், திராவிட கட்சிகளின் ஆட்சி காலங்களில் தான் ஊழல்கள் நடந்துள்ளதாக பொதுவாகச் சொல்வது ஏற்புடையதல்ல. தற்போதும் தவறுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
நல்ல அதிகாரிகள் தான் நிறைய பேர் இருந்தாங்க... அவங்களை தவறானவங்களா மாத்தியது, இரண்டு திராவிட கட்சிகளும் தான்... தவறான அதிகாரிகள் திருந்த அவகாசம் தேவைப்படுமே!
பா.ஜ., சமூக ஊடகப் பிரிவின் தமிழக பார்வையாளர் அர்ஜுனமூர்த்தி அறிக்கை:
ராமேஸ்வரத்தில் தீர்த்தக் கிணறுகளில் வாளி வாயிலாக தண்ணீர் எடுத்து, பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்கும் பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. அப்படியிருக்க, திருச்செந்துாரில் மட்டும் ஏன் நவீனமயமாக்கல் என்ற பெயரில் பாரம்பரிய அனுபவத்தை மாற்ற வேண்டும்? நாழிக்கிணற்றின் பாரம்பரிய தீர்த்த நீராட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
வாஸ்தவம் தான்... நவீனம் என்ற பெயரில், பக்தர்களின் பாரம்பரிய நம்பிக்கை மீது கை வைப்பது சரியல்ல!
காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் அறிக்கை:
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு, இலங்கை நீதிமன்றம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருப்பது, கடும் கண்டனத்துக்குரியது. வாழ்வாதாரத்திற்காக மீன் பிடிக்கச் செல்லும் நம் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்வதும், சிறையில் அடைத்து லட்சக்கணக்கில் அபராதம் விதிப்பதும் தொடர்கதையாகி விட்டது. தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனே தாயகம் அழைத்து வர, போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டில்லியில் வசிக்கும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலிடம் இந்த பிரச்னையை சொல்லி, மத்திய வெளியுறவு துறையிடம் பேசும்படி சொன்னீங்களா?
சென்னை மாநகராட்சி காங்., கவுன்சிலர் ராஜசேகரன், முதல்வர் விஜய்க்கு எழுதியுள்ள கடிதம்:
சேலம் மாநகராட்சி மேயராக, தி.மு.க.,வைச் சேர்ந்த ராமச்சந்திரன், துணை மேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாரதா தேவி உள்ளனர். 'துணை மேயர் இருக்கையை கீழே இறக்கினால் தான் மன்றத்தை நடத்துவேன்' என, ராமச்சந்திரன் தேவையற்ற பிரச்னையை எழுப்பினார். துணை மேயர் எதிர்த்ததால், மேயர் ராமச்சந்திரன் தன்னிச்சையாக இரண்டு மாதத்திற்கு துணை மேயரை இடைநீக்கம் செய்து அறிவிப்பு செய்ததோடு, கூட்டத்தை தொடர்ந்து நடத்தாமல் கூட்டம் முடிந்ததாக கூறி சென்று விட்டார். மேயர் ராமச்சந்திரனால் தொடர்ந்து இழைக்கப் படும் இத்தகைய அநீதிக்கு ஒரு முடிவு கட்ட, தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்னும் அஞ்சாறு மாசங்கள் தானே மேயர் பதவிக்காலம் இருக்கு... இருக்கும் வரை ஆடிட்டு போறாங்கன்னு விடுங்க!
